நிச்சயதார்த்த்க மோதிரம் உண்மையில் ஸ்பெஷலான ஒன்று. அது தொலைந்துபோனால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அதுபோல்தான் கடனடாவை சேர்ந்த மேரி க்ராம்ஸ்-க்கும் இருந்தது.
13 வருடங்களுக்கு முன்பு அவருடைய நிச்சயதார்த்த மோதிரத்தை, தன் தோட்டத்தில் களையெடுக்கும்போது தொலைத்துவிட்டார். ஆனால், 13 வருடங்கள் கழித்து அவருக்கு அவருடைய நிச்சயதார்த்த மோதிரம் கிடைத்துவிட்டது.
அது எங்கு இருந்து தெரியுமா கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவருடைய மருமகள் இதனை கண்டுபிடித்தார். அந்த மோதிரம் நிலத்துக்கடியில் சென்றுள்ளது. ஆனால், அதன் வழியாக கேரட் ஒன்றும் வளர்ந்திருக்கிறது. இப்போது அந்த கேரட்டைச் சுற்றி மோதிரம் உள்ளது. என்ன ஒரு ஆச்சரியம். அந்த மோதிரம் தடையாக இருந்தும் அதன் வழியே கேரட் ஒன்று வளர்ந்திருக்கிறது. மேரி க்ராம்ஸ்-க்கு அவருடைய நிச்சயதார்த்த மோதிரமும் கிடைத்துவிட்டது.
இதுகுறித்து பேசிய மேரி, நிச்சயதார்த்த மோதிரம் தொலைந்துபோனதை தன் கணவரிடம் சொல்லவில்லை எனவும், தன் மகனிடம் மட்டும் அதனை சொல்லிவைத்ததாகவும் தெரிவித்தார். மேரியின் கணவர் நார்மன் 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். “இந்த மோதிரம் கிடைத்ததால் அளவற்ற மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அடைகிறேன். அதற்குள் ஒரு கேரட் வளர்ந்திருக்கிறது. இது எப்படி என தெரியவில்லை”, என மேரி கூறினார்.
அந்த தோட்டம் அந்த குடும்பத்துடன் 105 வருடங்களாக பின்னிப்பிணைந்துள்ளது.
இதுகுறித்து அவருடைய மருமகள் கூறியதாவது, “நான் அந்த கேரட்டை பிடுங்கி எங்கள் நாய்க்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், நல்ல வேளை அப்படி செய்யவில்லை. அதனைக் கழுவியபோது அதில் மோதிரம் இருந்தது. அதனை அவரிடம் சொல்லும்போது அவரால் நம்பவே முடியவில்லை. அந்த மோதிரத்தின் உள்ளிருந்து கேரட் வளர்ந்திருப்பது விநோதமாக உள்ளது”, என கூறினார்.
அந்த மோதிரத்தை நன்றாக கழுவி அதனை மேரி மீண்டும் அணிந்துகொண்டார். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த மோதிரம் மேரிக்கு நன்றாக பொருந்தியிருந்தது.