சீனாவில் உள்ள ஹோங்சூ நகரில் அமைந்துள்ளது கே.பி.ஆர்.ஓ. உணவகம். நம்மூர் கே.எஃப்.சி. போன்று அங்கு இந்த உணவகம் மிக பிரபலம். இந்த உணவகத்தில் நீங்கள் சாப்பிட்டால் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பணம் என எதையும் நீங்கள் கொண்டு போக வேண்டாம். நீங்கள் சிரித்தால் போதும் கட்டணம் தானாக செலுத்தப்பட்டுவிடும்.
Advertisment
என்னது சிரித்தால் போதுமா என ஆச்சரியப்படுகிறீர்களா? வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் எல்லாமே சாத்தியமாகி விட்டது அல்லவா? அதனால் தான் இதுவும் சாத்தியம். நமது முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் மூலம், பில் தொகையை எளிதில் செலுத்தி விடலாம். இங்குதான் இம்மாதிரியான தொழில்நுட்பம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்நுட்பத்தின் பெயர் ‘ஸ்மைல் டூ பே’, அதாவது கட்டணம் செலுத்த சிரியுங்கள். இதன்மூலம், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளரின் முகம், முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பம் உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது. அதில் அவரது வங்கிக்கணக்கு விவரங்கள், பில் செலுத்தும் முறை ஆகியவை பதிவு செய்யப்பட்டு விடும். அதன் மூலம், வாடிக்கையாளர் மீண்டும் அந்த உணவகத்திற்கு வந்தாலும், அவர் முகத்தை பதிவு செய்திருப்பதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். அந்த இயந்திரத்தை பார்த்து சிரித்தாலே போதும். அந்த இயந்திரம் நம்மை சரியாக அடையாளம் காட்டிவிடும்.
இந்த தொழில்நுட்பம் தொடர்பான வீடியோவில், பெண் வாடிக்கையாளர் ஒருவர் தன் முகத்தை வெவ்வேறு விதத்தில் மாற்றியும், மேக்கப் செய்துகொண்டும், தலையில் ‘விக்’ வைத்துக்கொண்டும் அந்த இயந்திரத்தின் துல்லியத் தன்மையை சோதிக்கிறார். அந்த இயந்திரம், நமது முகத்தில் என்ன மாற்றங்கள் இருந்தாலும் நமது விவரங்களை சரியாக காட்டிவிடுகிறது என்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் கூடுதல் சிறப்பு.