ஸ்காட்லாந்தில் பொம்மை புலியை கண்டு காவலர்கள் 45 நிமிடங்கள் நின்றதை, நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
உலகிலேயே தலைச்சிறந்த காவல்துறையினர் என புகழப்படுவது ஸ்காட்லாந்து போலீசாரைத் தான். குற்றவாளிகளை பிடிப்பதில் துவங்கி, விசாரணையில் நுணுக்கங்களை கையாள்வதில் என ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் புலியால் அவர்களின் புகழுக்கு கலங்கம் ஏற்பட்டு, ஸ்காட்லாந்து போலீசார் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் என்ற பண்ணையில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக விவசாயி ஒருவர், ஸ்காட்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலையடுத்து, அந்த பண்ணைக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த புலி மிகுந்த கோபத்துடன் தோன்றுவதால் பாதுகாப்பு கருதி அந்த பகுதி சுற்றிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் மெது மெதுவாக நகர்ந்து புலியை சுற்றி வளைத்தனர்.
சுமார், 45 நிமிடங்களுக்கு பிறகு காவலர்கள் புலியை நெருங்கினார். அப்போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நீண்ட நேரமாக புலி நகரவில்லை என்ற சந்தேகத்தில் கல் எரிந்து பார்த்தவர்களுக்கு பின்பு தான் தெரிந்தது அது பொம்பை புலி என்று. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, அருகில் உள்ள வன உயிரினங்கள் பூங்காவிற்கு தொடர்புக் கொண்டு புலி ஏதேனும் காணாமல் போயியுள்ளதா என விசாரித்தனர். அதன் பின்பு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல் பொய்யானது என தெரிய வந்துள்ளது.
அதற்குள் இந்த செய்தியை உலக தொலைக்காட்சிகள் அனைத்தும் செய்திகளாக பதிவிட்டனர். பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அத்துடன், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பொம்பை புலியை பிடிக்க 45 நிமிடங்களா? என காவல் துறையினரை கிண்டல் செய்ய துவங்கினர். இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு ஆய்வாளர் ஜார்ஜ் கார்டினர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.