ஏலியன்களிடமிருந்து பூமியை காக்க அதிகாரி ஒருவரை நியமிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்.
பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு கிரகங்களை பாதுகாக்க நாசா நிறுவனம் உறுதிகொண்டுள்ளது. அதனால்தான், கிரகங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக அந்நிறுவனம், பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) ஒருவரை நியமிக்க அறிக்கை வெளியிட்டது. உண்மையில், பிரபஞ்ச பாதுகாப்பு அதிகாரியின் பணி என்பது, விண்வெளியில் பணிபுரியும் மனிதர்கள், பிரபஞ்சத்தில் உள்ள பல கிரகங்கள் மற்றும் சந்திரன்களை அசுத்தப்படுத்தாமல் கண்காணிப்பதே அவருடைய முழுநேரப்பணியாக இருக்கும்.
அந்த அதிகாரிக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம், சலுகைகள் வழங்கப்படும். இந்த அதிகாரியின் பணிக் காலம் 3 ஆண்டுகள். இது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு உயர் அதிகாரியாக ஓராண்டாவது பணி புரிந்தவராகவும் இருக்க வேண்டும். இயற்பியல், பொறியியல் அல்லது கணித பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அமெரிக்கர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நெட்டிசன்கள் பலர், இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உண்மையில் வேற்றுகிரகவாசிகளுடன் சண்டையிட வேண்டும் என தவறாக புரிந்துகொண்டு, மென் இன் பிளாக் திரப்பட நாயகன் வில் ஸ்மித்தின் பெயரையெல்லாம் அந்த பணிக்கு பரிந்துரைத்தனர்.