ஆன்லைன் வணிகதளமான அமேசானில் அதிக விலை மதிப்பு கொண்ட 166 ஸ்மார்ட்போன்கள் ஆர்டர் செய்து, பல லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். டெல்லி டி.நகர் பகுதியைச் சேர்ந்த சிவம் சோப்ரா(21) என்பவர் ஹோட்டல் மேனேஜ்மேன்ட் படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்தபின்னர் சில வேலைகளை செய்துவந்த அவர், பின்னர் அந்த வேலைகளை உதறிவிட்டு புதிய ஐடியாக்களை யோசித்திருக்கிறார். அதாவது, ஆன்லைனில் விலைமதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து பின்னர், பார்சலில் ஸ்பார்ட்போன் ஏதும் இல்லை என ரீஃபண்ட் பெறுவது தான் சிவம் சோப்ராவின் ஸ்மார்ட்டான ஐடியா.
இதற்காக கடந்த மார்ச் மாதம் இரண்டு ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொண்டு, பின்னர் பார்சலில் எதுவும் இல்லை என ரிஃபண்ட் தொகையை பெற்று டிரையல் பார்த்திருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் இதனையையே தொழிலாக செய்யத்தொடங்கிய அந்த நபர், ஆப்பிள், சாம்சங், ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து மோசடி செய்து வந்திருக்கிறார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தவறான முகவரியை கொடுப்பது அவரது வழக்கம். இதனால், டெலிவரி செய்ய வருபவர்களிடம், மற்றொரு இடத்திற்கு வரச்சொல்லி ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்களை பெற்று வந்திருக்கிறார்.
ஒரே மொபைல் நம்பரில் இருந்து பல்வேறு பல ஸ்டார்ட்போன்களை ஆர்டர் செய்தால் கண்டறிந்துவிடுவார்கள் என்பதால், இதற்காக 100-க்கும் மேற்பட்ட சிம்களை வாங்கியிருக்கிறார் சிவம் சோப்ரா. இதற்கு உடந்தையாக இருந்த மொபைல் ஸ்டோர் உரிமையாளர் சச்சின் ஜெயின்(38) என்பவர், சிவம் சோப்ராவிற்கு 141-க்கும் மேற்பட்ட ப்ரி-ஆக்டிவேடெட் சிம்களை கொடுத்திருக்கிறார். இந்த சிம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.150 வசூல் செய்திருக்கிறார் சச்சின் ஜெயின்.
ஆன்லைனில் ஆர்டர் செய்தவற்றிற்கு ரிஃபண்ட் தொகை கிடைத்ததும், பின்னர் அந்த ஸ்மார்ட்போன்களை ஓ.எல்.எக்ஸ் போன்றவற்றின் மூலம் விற்பனையும் செய்திருக்கிறார் சிவம் சோப்ரா. இப்படியே சம்பாதித்து லட்சாதிபதியான நிலையில், அப்படியே கோடீஸ்வரராகிவிடலாம் என்று சிவம் நினைத்திருப்பார் போலும்.
இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டதை நோட் செய்த அமேசான் நிறுவனம், காவல்நிலையத்தில் புகார் அளித்தது. இதனையடுத்து, பல நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார், மோசடி வேலையில் ஈடுபட்டு வந்த சிவம் சோப்ராவை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும், சிவம் சோப்ராவிற்கு உடந்தையாக இருந்து சிம் விற்பனை செய்த சச்சின் ஜெயினையும் போலீஸார் கைது செய்தர்.
போலீஸாரின் விசாரணையில், சிவம் சோப்ரா, 166 ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து இதுபோன்று மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், சிவம் சோப்ராவிடம் இருந்து 19 போன்கள், 12 லட்சம் ரொக்கப்பணம், 40 வங்கிகளின் பாஸ்புக், செக் புக் போன்றவற்றை போலீஸார் கைப்பறியனர். வங்கிகளில் மட்டுமல்லாமல், சுமார் ரூ.10 லட்சம் வரையிலான பணத்தை சிலரிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்க கூறியிருக்கிறார் என்பத விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக ஹைதராபத்திலும், இதுபோன்று மோசடி வேலையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர். ஆர்டர் கொண்டுவரும் நபர்கள் பணத்திற்காக காத்திருக்கும் அதேவேலையில், மறைவான இடத்திற்கு பார்சலை கொண்டு திறப்பார்கள். பின்னர், பார்சலில் இருந்த பொருட்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக செங்கல் போன்ற எதையாவது வைத்துவிட்டு அந்த ஆர்டரை ரத்து செய்துவிடுவார்களாம். அமேசான், பிளிப்கார்டு போன்ற பல்வேறு நிறுவனங்களில் இதுபோன்று ஆர்சடர் செய்து மோசடி செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.