”பேய் இருக்கா? இல்லையா?”, “நம்பலாமா? நம்பக்கூடாதா?”, இந்தக் கேள்விகளுக்கு எப்போது விடை தெரியும் என தெரியவில்லை. பேய் படங்களில் மட்டும்தான் பேய் இருக்கிறது என பெரும்பாலானோர் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த லீ ஸ்டீருக்கு ஏற்பட்டதோ அதிபயங்கர அனுபவம். இவர், இ-பே எனப்படும் ஆன்லைன் வணிக தளத்திலிருந்து சில நாட்களுக்கு முன்னால் 71,000 ரூபாய் கொடுத்து பொம்மை ஒன்றை வாங்கினார்.பொம்மையின் விலைக்கே வாய் பிளக்காதீர்கள்? அடுத்து நடந்தவற்றை பொறுமையுடன் படியுங்கள். இந்த பொம்மையை ஏற்கனவே வைத்திருந்த பெண் ஒருவர், அந்த பொம்மை தன் கணவரை தினமும் தாக்குவதாகவும், தன்னுடைய நெக்லஸை எடுப்பதாகவும் குறிப்பிட்டு இ-பே மறுவிற்பனை தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், லீ ஸ்டீர், அந்த பொம்மையை ஆராய்ச்சி செய்ய விரும்பி பெரும் பணத்தை செலவிட்டு வாங்கினார். அதற்கு ‘எலிசபெத்’ என பெயரும் வைத்திருக்கிறார். ஆனால், அந்த பொம்மையிடம் லீ ஸ்டீரின் தந்தை மாட்டிக்கொண்டார். அந்த பொம்மையை ஓரிடத்தில் வைத்து அது என்னென்னவெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் நேரலையாக சமூக வலைத்தளங்களில் லீ ஸ்டீர் பதிவிட்டு வந்தார். அந்த பொம்மை, தன் தந்தையை தாக்கியதாகவும் லீ ஸ்டீர் கூறுகிறார்.
ஒருமுறை லீ ஸ்டீர் வீட்டின் மேல் அறையிலிருந்து அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்டீரின் அம்மாவிடம் தனக்கு கை வலிக்கிறதென தன் தந்தை கூறியதாக ஸ்டீர் தெரிவித்தார். அப்போது, அவருடைய கையை பார்த்த போது ஆறு இடங்களில் கீறல்கள் இருப்பதை பார்க்க முடிந்ததாக ஸ்டீர் கூறினார்.
இது நம்பத்தகுந்ததா என தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல்.