சீனாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு சென்றிருந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தை, நீதிமன்றத்தின் வெளியே அழுதுகொண்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் ஒருவர் அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய சீனாவில் உள்ள சாங்ஷி சின்சோங் பகுதியில் நீதிமன்றம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு, பொதுமக்களிடம் முறைகேடாக பணத்தை பெற்று கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர், நீதிமன்றத்துக்குள் சென்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இந்நிலையில், தனது பச்சிளம் குழந்தையை நீதிமன்ற வளாகத்தில் ஹோ லினா என்ற பெண் போலீசாரிடம் பாதுகாப்பில் கொடுத்துவிட்டு சென்றார்.
இந்நிலையில், குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது. அழுகையை ஆற்ற எவ்வளவு முயன்றும் ஹோ லினா உட்பட அங்கிருந்த பெண் போலீசாரால் முடியவில்லை. இதனால், குழந்தையை சமாதானப்படுத்த போலீஸ் அதிகாரி ஹோ லினா என்ன செய்தார் தெரியுமா? விசாரணைக்கு ஆஜரான அக்குழந்தையின் தாயின் அனுமதியுடன் குழந்தையை தன் மடியில் கிடத்தி தாய்ப்பால் புகட்டினார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஹோ லினா தெரிவித்ததாவது, “நானும் இப்போதுதான் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறேன். அதனால், குழந்தையை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விசாரணைக்கு உள்ளே சென்றிருக்கும் அந்த தாயின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடியும். குழந்தையை என்னால் முடிந்தவரை சமாதானப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் நான் செய்தேன்”, என கூறினார்.
தன் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி தாய்ப்பால் அளித்த சம்பவம் குழந்தையின் தாய்க்கும் மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது. அவரால், தன் அழுகையை கட்டுப்படுத்த கூட முடியவில்லை.
இச்சம்பவத்தால், ஹோ லினாவை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால், அவர் பிரபலமும் அடைந்திருக்கிறார். இதுகுறித்து கூறிய ஹோ லினா, ”மற்ற பெண் போலீசாரும் என் இடத்தில் இருந்திருந்தால் இதையேதான் செய்திருப்பார்கள் என நம்புகிறேன்.”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.