மாதவிடாய் குறித்த விவாதங்கள் நம் சமூகத்தில் அதிகளவு இப்போது பேச துவங்கினாலும், அதுகுறித்த சில தவறான புரிதல்கள் பொது சமூகத்தில் வேரூன்றியுள்ளன. பேட் மேன் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக, சானிட்டரி நாப்கின்களுடன் புகைப்படங்கள் எடுத்தாலும், மாதவிடாய் குறித்த வாசகங்கள் எழுதிய பலகையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும், மாதவிடாய் குறித்த சந்தேகங்கள், தவறான புரிதல்கள் தீர்ந்தபாடில்லை.
பிரிட்டனிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் மாதவிடாய் வலியில் துடித்த இளம்பெண், அந்த விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிர்மிங்காம் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் பெத் ஈவான்ஸ் என்பவர் தன் காதலர் ஜோஷ்வா மோரான் உடன் பயணிக்க தயாராக இருந்தார். விமானம் புறப்பட சில நொடிகளே இருந்த நிலையில், பெத் ஈவான்ஸ் மாதவிடாயால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் துடித்திருக்கிறார்.
ஆனால், தன்னால் ஏழு மணிநேர பயணத்தை தாங்கிக்கொள்ள முடியும் என தெரிவித்திருக்கிறார் பெத். ஆனால், விமானத்தில் மருத்துவர் யாரும் இல்லாததால், நடுவானில் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாதென அந்த பெண்ணை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர் அதிகாரிகள்.
இதுகுறித்து அப்பெண்ணின் காதலர் மோரான் தெரிவிக்கையில், “மாதவிடாய் வலியை புரிந்துகொள்ளாமல் விமானத்திலிருந்து வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம். அங்குள்ள பெண் பணியாளர் பெத்திடம் மாதவிடாய் குறித்து கேள்விகள் எழுப்பியபோது, அவர் அழுதார்.”, என கூறினார்.
இதனால், பெத் மற்றும் மோரான் 25,000 ரூபாய் செலவழித்து வேறொரு விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனிடையே, பெத் தனக்கு மாதவிடாய் காரணமாக வயிற்று வலியால் அவதியுறுவதாகவும், மருத்துவர் இல்லாமல் நடுவானில் அவர் சிரமத்தை எதிர்கொள்ளக் கூடாது என்பதாலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.