புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் இன்று அறிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு வந்துவிட்டாலே, சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம். வெறும் வழக்கம் என்று சொல்வதை விட, வாழ்க்கையை பாழாக்கும் வழக்கம் என்று சொன்னால் மிகையாகாது. ரேஸில் ஈடுபடுபவர்களால், புத்தாண்டில் பல கனவுகளுடன் அடியெடுத்து வைக்கும் அப்பாவி இளைஞர்கள் பலர் பரிதாபமாக பலியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. அதிலும், பைக்கை நிறுத்துவதற்கு பைக் கம்பெனிக்காரன் ஸ்டாண்ட் போட்டு கொடுத்தால், அவர்கள் பைக்கை மின்னல் வேகத்தில் செலுத்தி, அப்போது ஸ்டாண்டை ரோட்டில் படும்படி எடுத்து விட்டு, அதன் மூலம் தீப்பொறிகளை பறக்க விட்டு, பொதுமக்களை அச்சப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் அருண் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டாலோ, மது அருந்தியிருந்தாலோ, அவர்கள் வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் பெறுவதில் காவல்துறை வழங்கும் தடையில்லா சான்று கிடைக்காது. புத்தாண்டு அன்று டிசம்பர்.31-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 1 மணி வரை சென்னையில் மேம்பாலங்கள் தவிர முக்கிய சாலைகள் மூடப்படும். அதே போன்று டிச.31-ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். சென்னை மெரினாவில் 8 இடங்களில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்" என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.