Advertisment

ஓபிஎஸ், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சட்டப்பேரவை செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க சட்டப்பேரவை செயலாளர்க்கு ஐகோர்ட் உத்தரவு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
O.Panneerselvam disproportionate assets Case, ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

O.Panneerselvam disproportionate assets Case, ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட அரசுக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க சட்டப்பேரவை செயலாளர்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

இது தொடர்பாக திமுக கொறடாவும், எம்.எல்.ஏ-வுமான சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி அரசு மீது கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் 18ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் வெளியேற்றப்பட்டோம். அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏ-க்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவுஎம்எல்ஏ-க்கள் 11 பேர் தற்போதைய தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். கோவை எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார். அரசு கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட இந்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆகஸ்டு 22ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை மட்டும் சட்டப்பேரவைத் தலைவர் ஒரு தலைபட்சமாக தகுதி நீக்கம் செய்துள்ளார். எனவே ஓபிஎஸ் மற்றும் அவரது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக கொறடா சக்கரபாணி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

‘‘அரசு கொறடா உத்தரவை மீறி, கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னிர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த மனு மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து இந்த நீதிமன்றத்திலும் சபாநாயகர் தரப்பில் பதிலளிக்கவில்லை. 22 ஆகஸ்டில் தினகரன் அணியினர் முதல்வருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த இரண்டு நாளில் அதாவது ஆகஸ்ட் 24ம் தேதியே டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் 18 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் இருந்து அவர் ஒருதலைபட்சமாக நடந்துள்ளார் என்பது இதில் தெளிவாகியுள்ளார். இதன் மூலம் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே தற்போது நடைபெற்று வரும் அரசு சட்டவிரோத அரசு ஆகும்’’ என வாதிட்டார்.

சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைதியநாதன், ’’எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கபட்டால் அந்த உத்தரவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாமே தவிர, தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு யாரும் உத்தரவிட முடியாது. சபாநாயகருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.’’ என வாதிட்டார்.

கபில் சிபல், ’’ஆகஸ்ட் 22 தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்த உடனேயே, ஆகஸ்ட் 24ம் தேதியே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மார்ச் 20ல் ஓ.பி.எஸ். அணியினர் மீது நடவடிக்கை எடுக்க 9 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கலை என எங்களுக்கும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்திலும் முழுமையாக தெரிவிக்கவில்லை. அரசு கொறடா உத்தரவை மீறி பிப்ரவரி 18 நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். அணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என வாதிட்டார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சக்கரபாணி மனு தொடர்பாக வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் பதில் அளக்க சட்டப்பேரவை செயலாளர், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment