கொரோனா பரவல் தொற்று குறைந்துவந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது.மீண்டும் மக்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படுத்துவது என்பது அரசினுடைய முடிவாக இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இன்று வரை மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானிய விலையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 50 பயணாளிகளுக்கு இருசக்கர உணவகங்களை வழங்கினார். பின்னர் சிறு வணிகர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “இப்போது இருக்கின்ற சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால், படிப்படியாக தொற்றுநோய் குறைகின்றபோது மீண்டும் மக்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படுத்துவது என்பது அரசினுடைய முடிவாக இருக்கிறது. 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பொது முடக்கம் அமலில் இருக்கின்ற காரணத்தால் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று முதல்வர்தான் முடிவு செய்வார். ஆன்லைன் வகுப்பை பொறுத்தவரை எப்படி என்று இன்னும் யோச்சிக்க வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி கல்வியாளர்களோடும் எங்களுடைய துறை அதிகாரிகளோடும் கலந்து பேசி முதலமைச்சரிடத்தில் எடுத்துச் சொல்வேன்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.