சென்னை தி.நகரின் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையான 'சென்னை சில்க்ஸ்'-ல் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த 11 ஊழியர்களை, 4 மணி நேர போராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
அதிகாலை முதலே எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அதிக வெப்பத்தின் காரணமாக அந்த கட்டடத்தின் உள்பகுதியில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும், தற்போது கட்டடத்தின் முகப்பில் இருந்த 15 அடி சுவர் இடிந்து விழுந்தது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிக வெப்பத்தின் காரணமாக அந்த சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து சுவர் இடிந்து விழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. சுவர் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதிகாலை முதல் தற்போது வரை 15 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அருகருகே கட்டடங்கள் இருப்பதால் தீயணைப்பு பணியில் தாமதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.