விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை ஒருவர், கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி 4 மாணவிகளை நிர்மலா கன்வின்ஸ் செய்யும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதற்கு மாணவிகள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்று மறுக்கின்றனர். இருப்பினும், அவர்களைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தும் விதத்தில் பேராசிரியை நிர்மலா பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.