மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியார் நியமனத்தை ரத்து செய்ய கோரி திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்த மனுவில் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயகொடி ஐஏஎஸ் என்பவரின் நியமனத்தை எதிர்த்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் தற்போதைய மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிக்கபட்டுள்ளார்.
மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு. தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க கூடாது நடைமுறைகள் உள்ளன. இந்த பொறுப்பிற்கு தமிழக அரசின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாமல் திடிரென ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த ஜெயகொடியை என்பவரை மாற்றிவிட்டு, தமிழக அரசின் கீழ் இயங்கும் நில நிர்வாக ஆணையாரான மோகன் பியாரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக கடந்த 8 ஆம் தேதி தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் இந்த பணி மாறுதல், மற்றும் புதிய பணி நியமனம் ஆகியவை விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துள்ளது எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி விதிகளை பின்பற்றாமல் நடந்துள்ள இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து மனு தொடர்பாக ஜனவரி 24 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.