திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து திருப்பூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. தொடர்ந்து, எதிர்ப்புகள் வலுக்க, 'அந்த கருத்தை நான் பதிவிடவில்லை. எனது அட்மின் தான் தவறுதலாக பதிவிட்டுள்ளார்' என்றார் ஹெச்.ராஜா.
இந்த நிலையில், ராமராஜ்ய ரத யாத்திரை இன்று தமிழகத்திற்கு வர இருந்த போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. பெரியார் சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டது. இதற்கு ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ரஜினிகாந்தும் இந்த செயல் காட்டுமிராண்டித்தனமானது என விமர்சித்து இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின், "பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!
உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம், இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்!" என்று தனது ட்விட்டர் மட்டும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.