டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்கள் 2 பேர் அந்த அணியில் இருந்து விலகி, முதல் அமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக அந்த கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரப்பூர்வ அதிமுகவாக ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அணிதான் என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து, டிடிவி தினகரனை ஆதரித்து வந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான, விஜிலா சத்தியானந்த் (கொறடா), நவநீதகிருஷ்ணன் (தலைவர்), புதுவை கோபால கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, கட்சியில் இணைந்து கொண்டனர்.
இன்று காலை நிருபர்களிடம் டிடிவி தினகரன் பேசும் போது, ‘அவர்கள் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கே போனார்கள்’ என்று கூறினார்.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் இன்று மாலை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்துக்கு வந்தனர். அவரை சந்தித்து கட்சியில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் நிருபர்களிடம் பேசும் போது, ‘இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் அடிப்படையிலேயே முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்’ என்று கூறினார்.