Advertisment

இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று மாலை 4 மணிக்கு விசாரணை : உச்சநீதிமன்றத்தில் டிடிவி கோரிக்கை நிராகரிப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கை இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தரப்பு கோரிக்கை நிராகரிப்பு!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
two leaves symbol case, two leaves symbol affidavits filed, election commission of india inquires two leaves case, tamilnadu, ECI, two leaves symbol

இரட்டை இலை சின்னம் வழக்கை இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் அவகாசம் கேட டிடிவி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகும்படி இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

அதற்கு முன்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ம் தேதியை கடைசி நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. இந்த அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டிடிவி தினகரன் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான 29-ம் தேதி இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பக்கம் பக்கமாக அபிடவிட்களை தாக்கல் செய்தனர்.

115 எம்.எல்.ஏ.க்கள், 44 எம்.பி.க்கள், 50 மாவட்டச் செயலாளர்கள், 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக டிடிவி தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சுமார் 1000 அபிடவிட்களை புதிதாக தாக்கல் செய்தார்.

மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என கடிதம் கொடுத்தார் அவர். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி மீண்டும் அவகாசம் எடுத்துக்கொண்டு சில ஆவணங்களை டிடிவி தரப்பு தாக்கல் செய்தது.

இப்படி இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்து முடித்துவிட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி இன்று (அக்டோபர் 6) மாலை 3 மணிக்கு இந்த விவகாரத்தில் இறுதிகட்ட விசாரணை நடத்துவதாக இருந்தது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இன்று காலையில் டிடிவி தினகரன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வழக்கில் டிடிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பத்தாயிரம் பக்கங்களுக்கும் அதிகமாக ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறோம். அவை தொடர்பாக எங்கள் வாதங்களை முன்வைக்கு எங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை’ என்றார் அசோக் தேசாய்.

அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ‘கடந்த 6 மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் இந்த விசாரணை நிலுவையில் இருக்கிறது. எனவே அவர்கள் கூடுதல் அவகாசம் கேட்பது நியாயமில்லை. தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி இன்று விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார் அவர்.

அப்போது டிடிவி தரப்பு வழக்கறிஞர் அசோக் தேசாய், ‘இன்று தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறாரா? மொத்த தேர்தல் ஆணையமும் விசாரிக்குமா என அறிய விரும்புகிறோம்’ என்றார். அதற்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, ‘தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களும் அமர்ந்து விசாரிப்பார்கள்’ என கூறினார்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இன்று விசாரிக்க தடை விதிக்க மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு விசாரிக்கவும் உத்தரவில் கூறப்பட்டது. பிற்பகல் 2.30 மணி வாக்கில் இந்த உத்தரவு கூறப்பட்டதால், டிடிவி தரப்பு தேர்தல் ஆணையம் செல்ல வசதியாக அந்த ஒரு மணி நேர அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

எனவே ஏற்கனவே திட்டமிட்ட மாலை 3 மணிக்கு பதிலாக இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை மேற்கொள்கிறது. அப்போது இரு தரப்பு சார்பில் வழக்கறிஞர்களே ஆஜராகி, தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள்.

அப்போது மதுசூதனன் - ஓபிஎஸ் தரப்பில் மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக சபாநாயகர் தனபால் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்தான் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிவி.தினகரன் தரப்பிலும் அதே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அபிஷேக் மனு சிங்விதான் இன்று தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி வாதங்களை முன்வைப்பார் என தெரிகிறது. தேவைப்படும் பட்சத்தில் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித்தும் டிடிவி அணிக்காக தேர்தல் ஆணையத்தில் வாதிட வாய்ப்பு இருக்கிறது.

இரு தரப்பும் உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர்களை களத்தில் இறக்கியிருப்பதால் தேர்தல் ஆணையத்தில் இன்றைய விவாதத்தில் அனல் பறக்கும் என தெரிகிறது. தேவைப்பட்டால் இறுதி விசாரணைக்காக இன்னொரு நாளையும் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

 

V K Sasikala Supreme Court Ttv Dhinakaran Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment