Advertisment

இரட்டை இலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஷாக் : அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே இனி ‘அபிடவிட்’ அதிகாரம்

இரட்டை இலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஷாக் கிடைத்திருக்கிறது. இனி அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே ‘அபிடவிட்’ அதிகாரம்!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘two leaves' symbol case,ttv dhinakaran shock, election commission of india letter, aiadmk affidavits

இரட்டை இலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஷாக் கிடைத்திருக்கிறது. இனி அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே ‘அபிடவிட்’ அதிகாரம்!

Advertisment

இரட்டை இலை சின்னம்தான் அதிமுக.வின் முக்கியமான அடையாளம்! இதை வெறுமனே தேர்தல் சின்னம் என்று மட்டும் பார்க்க முடியாது. இந்தச் சின்னத்தை கைப்பற்றும் அணியே, உண்மையான அதிமுக.வாக தன்னை நிலைநிறுத்தும். எனவேதான் அதிமுக அணிகள் இந்த சின்னத்தை கைப்பற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.

இரட்டை இலை யாருக்கு? என்கிற விவகாரத்தில் கடந்த மார்ச் மாதமே ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தங்களுக்கு மெஜாரிட்டி நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக கூறி சசிகலா, டிடிவி.தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதற்கு உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங்-அகிலேஷ் யாதவ் இடையிலான வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவையும் அவர்கள் முன் உதாரணமாக சுட்டிக்காட்டினர்.

ஆனால் ஓபிஎஸ் தரப்பு, ‘அதிமுக.வைப் பொறுத்தவரை பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கே இருக்கிறது. எனவே இங்கு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் ஒரே அதிகாரம்தான். எனவே அடிப்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கோரினர்.

இதை தேர்தல் ஆணையம், எந்தக் குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக்கொண்டது. உடனே இரு தரப்பும் லட்சக்கணக்கில் உறுப்பினர்களிடம் அபிடவிட் பெற்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். இடையில் ஜெ.தீபா தரப்பும் பல்லாயிரக்கணக்கில் அபிடவிட்களை தாக்கல் செய்தனர். பல லட்சம் அபிடவிட்களை புரட்டிப் பார்க்கவே தேர்தல் ஆணையத்திற்கு நீண்ட அவகாசம் தேவைப்படும். எனவே இரட்டை இலை சின்னம் வழக்கில் எந்த முடிவையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் கிடப்பில் போட்டது.

இரட்டை இலை சின்னம் வழக்கில் மதுசூதனன், ஓபிஎஸ் ஆகியோர் ஒரு தரப்பாகவும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் உள்ளனர். முன்பு கொடுக்கப்பட்ட அபிடவிட்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் சசிகலா தரப்புதான் அதிகம் அபிடவிட்களை தாக்கல் செய்திருந்தது.

ஆனால் அப்போது சசிகலாவுக்காக அபிடவிட்களை தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தற்போது ஓபிஎஸ்.ஸுடன் கை கோர்த்திருக்கிறார். ஏற்கனவே வழங்கிய லட்சக்கணக்கான தொண்டர்களின் அபிடவிட்களை வாபஸ் பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இரட்டை இலை வழக்கு சசிகலாவுக்கு சாதகமாக செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 21-ம் தேதி சசிகலா, டிடிவி.தினகரன், மதுசூதனன், ஓபிஎஸ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் கடிதத்தைப் பார்த்தால் நிலவரம் அப்படி இல்லை. இந்தக் கடிதத்தில், ‘செப்டம்பர் 29-ம் தேதி வரை மட்டுமே ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி உண்டு. இனி தனி நபர்களாக யாரும் அபிடவிட் தாக்கல் செய்ய முடியாது. கட்சிக் குழுக்களின் தீர்மானம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் புதிதாக அபிடவிட்களை தாக்கல் செய்யலாம். ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5-ம் தேதி நிலவரப்படி, கட்சி நிர்வாகிகள் பட்டியலை இரு தரப்பும் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, அக்டோபர் 5-ம் தேதி இரு தரப்பும் நேரில் ஆஜராகவேண்டும்’ என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இந்தக் கடிதத்தைப் பார்த்தால், முழுக்க சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டதாக தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த வாதத்தைத்தான் சசிகலா தரப்பு முன்வைத்தது. அப்போது அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் இப்போது நிர்வாகிகளின் தலைகளை எண்ணிப் பார்க்க தேர்தல் ஆணையம் தயாராகும் சூழலில், சசிகலா தரப்பிடம் நிர்வாகிகள் இல்லை. இப்போது தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிடமே உள்ளனர். எனவே இந்த எண்ணிக்கை அடிப்படையிலும், பொதுக்குழு தீர்மான அடிப்படையிலும் முடிவெடுக்கும்படி இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுப்பார்கள்.

சசிகலா-டிடிவி.தினகரன் அணியினர் ஏற்கனவே தாக்கல் செய்த அடிப்படை உறுப்பினர்களின் அபிடவிட் எண்ணிக்கை அடிப்படையில் முடிவெடுக்க வற்புறுத்துவார்கள். ஆனால் தேர்தல் ஆணையம், ‘பொதுச்செயலாளர் தேர்தலில்தான் உங்கள் கட்சி விதியை அமுல்படுத்த முடியும். அதாவது, பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில்தான் அடிப்படை உறுப்பினர்களுக்கு அதிகாரம்!

தேர்தல் சின்னத்தைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணைய விதிமுறைகளைத்தான் பின்பற்ற முடியும். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, நிர்வாகிகள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை மட்டுமே பார்க்க முடியும்’ என கூற வாய்ப்பிருப்பதாக சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இந்த விதியை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தருணத்தில் தேர்தல் ஆணையம் கூறாதது ஏன்? என்கிற கேள்வி எழும். தேர்தல் ஆணையம் என்ன உத்தரவைப் பிறப்பித்தாலும், அதில் பாதிக்கப்படுகிற தரப்பு நீதிமன்றத்தை அணுகவே செய்வார்கள்.

 

Ttv Dhinakaran Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment