தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பூந்தமல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஏழுமலை மீது மர்மநபர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.டி.வி. தினகரன் ஆதரவாரவாளரான ஏழுமலை, மீது துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் ஆதரவாளர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏழுமலையும் ஒருவர். இதனால், டிடிவி தினகரனுக்கு ஆதவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஏழுமலை, திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை மறித்த மர்மநபர், ஏழுமலையின் காரை உருட்டுக் கட்டையால் தாக்கிதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின்போது, காயமடைந்த ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஏழுமலையின் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சென்னை-திருப்பதி நெடுஞ்சலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதேபகுயைச் சேர்ந்த நைனா கண்ணு என்ற, அ.தி.மு.க தொண்டர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நைனா கண்ணு என்பவர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமறைவான நைனா கண்ணுவை போலீஸார் தேடி வருகின்றனர்.