Advertisment

சட்டப்பேரவையில் 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை: ஐகோர்ட் உத்தரவு!

சட்டப்பேரவையில் 20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
advocate general vijay narayan, cm edappadi palaniswami,ttv dhinakaran, aiadmk, aiadmk merger, speaker dhanapal, chennai high court, TN government.

மு.க.ஸ்டாலின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் வரும் செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisment

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் முகாமிட்டபடி, தமிழக ஆட்சியாளர்களுக்கு ‘தண்ணி’ காட்டி வருகிறார்கள். இவர்களில் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசியல் சாசன சட்டப்படி உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

அடுத்த சில நாட்களில், ‘கட்சிக்கு எதிராக செயல்பட்ட இவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது மேற்படி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தனர். தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சபாநாயகர் தனபாலை சந்தித்து 19 பேர் சார்பிலும் விளக்கம் அளித்தனர். ஆனால் இந்த விளக்கம் விரிவாக இல்லை என குறிப்பிட்ட சபாநாயகர் தனபால் மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கிடையே மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, டிடிவி.தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் புதிதாக இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவரான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி. விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் புதிதாக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 21 ஆனது.

இவர்களில் கவர்னரிடம் முதலில் மனு கொடுத்த 19 பேரில் ஜக்கையன் தவிர 18 பேரும் செப்டம்பர் 14-ம் தேதி நேரில் ஆஜராகி தன்னிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மேற்படி எம்.எல்.ஏ.க்கள் தற்போது நெருக்கடியான சூழலில் கர்நாடகாவில் தங்கியிருக்கிறார்கள். போலீஸை அங்கு அனுப்பி அவர்களை கரைக்க அரசுத் தரப்பு எடுத்த முயற்சி பலன் கொடுக்கவில்லை.

இந்தச் சூழலில் அத்தனை எம்.எல்.ஏ.க்களும் சென்னைக்கு வந்தால், அதில் எத்தனை பேரை ஆளும்தரப்பு வேட்டையாடும் என கூற முடியாது. எனவே இப்போதைக்கு கர்நாடகாவை விட்டு அசைய டிடிவி.தரப்பு தயாரில்லை. எனவே இன்று சபாநாயகர் தனபால் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் மறுத்துவிட்டனர். தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

ஆனால் அதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை என தெரிகிறது. இந்தச் சூழலில் நேற்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை சபாநாயகர் தனபால் அழைத்து ஆலோசனை நடத்தினார். இன்று அரசு கொறடா தாமரை ராஜேந்திரனையும் சபாநாயகர் தனபால் அழைத்து விவாதித்தார். இதெல்லாம் மேற்படி 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க இருப்பதன் அறிகுறியாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டிடிவி.தினகரன் அணியின் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருவதாக இன்று உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு சென்றனர்.

அதைத் தொடர்ந்து, ‘18 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்திருக்கிறதா? என இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கும்படி’ அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதி அளிக்க முடியாது என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நீதிமன்றத்தில் பதில் அளித்தார்.

அரசு தலைமை வழக்கறிஞரின் இந்த பதிலையடுத்து, செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தனது தீர்ப்பில், "தகுதி நீக்கம் செய்து வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு சாதமாக அமையும். ஆளுநரின் செயலாளர், பேரவை செயலாளரிடம் விளக்கம் பெற்று புதன்கிழமை தெரிவிக்க வேண்டும்" என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Chennai High Court Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment