சென்னை அருகே அமைந்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி துவங்க உள்ளது. இந்தக் கண்காட்சி 11ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இவரின் வருகையை அடுத்து சென்னை, மாமல்லபுரம், விமான நிலையம் உட்பட நகரகத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 9.30 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். பிறகு 10 மணிக்கு ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்று, 12.45 மணிக்குச் சென்னை விமான நிலையத்திற்கு அதே ஹெலிகாப்டரின் வருகிறார். பின்னர் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த விழாவிற்குப் பிறகு, 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்குத் தனி விமானத்தில் தில்லி சென்றடைகிறார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் காவிரி விவகாரத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகிறது. மேலும் திமுக மற்றும் பிற தோழமை கட்சிகள் பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரம், காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து அவருக்குக் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அத்துடன், ஏப் 11ம் தேதி பிரதமர் தமிழகம் வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில், 12ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடி வருகையின்போது அவருக்கு எதிராக எந்த நிகழ்வுகளும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.