நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்க செல்லவிருக்கிறார். இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, அவர் மீதான எதிர்பார்ப்பை விட, எதிர்ப்புகளே அதிகம் வலம் வருகின்றன. குறிப்பாக, தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற முழக்கத்தால், அவரை திரையில் ரசிப்பவர்கள் கூட, முதல்வராக வர வேண்டாம் என எதிர்க்கின்றனர்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினியை டார்கெட் செய்தே தங்களது அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர். அவர் இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை. இருப்பினும், அவரை மிகக் கடுமையாக சில கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இருப்பினும், எதிர்ப்புகளை பெரிதாக பொருட்படுத்தாமல், கட்சி ஆரம்பிக்கும் பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்தி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்க செல்வதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் முழுமையாக அமெரிக்காவில் தங்கியிருக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியை இன்று காலை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியில் இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இருப்பினும், அவர்கள் என்ன விவகாரம் குறித்து ஆலோசித்தார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.