குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றிக்கொண்டது. இதில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து, வனத்துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்களை மீட்கும் பணி நடைப்பெற்றது.
மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவுப்படி குரங்கணி பகுதிக்கு செல்ல ராணுவத்திற்கு சொந்தமான ஹலெிகாப்டர்கள் நேற்று வந்து சேர்ந்தன. அதன் பின்பு, இன்று காலை லக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலி பேடுவில் இருந்து ஹெலிகாப்டர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றன.
முன்னதாக மதுரையில் இருந்து 16 கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குள் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் அவர்கள் தேனி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுரை கலந்த தண்ணீரை பீச்சி தீயை அணைக்க முயற்சி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.