தமிழக மீடியாக்கள் முன் மாதியானவை என மகாராஷ்ரா கவர்னரும், தமிழக முன்னாள் பொறுப்பு கவர்னருமான வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் 13 மாதங்கள் பொறுப்பு ஆளுநராக இருந்தது குறித்து வித்யாசாகர் ராவ், 'முக்கியமான அந்த நாட்கள்' (Those Eventful Days) என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று (16.10.17) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயடு, ஆளுநர் பன்வரிலால், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவுடனான சந்திப்பில் தொடங்கி சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரிய போது எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கை உள்பட 12 அத்தியாயங்களாக தனது அனுபவத்தை வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் ராவ் பேசியதாவது :
நான் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக முதன்முறை சென்னை வந்த போது, என்னை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் வரமாட்டார் என்றே நினைத்தேன். ஏனெனில் தலைவர்கள் வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிதானது. ஆனால் நான் அதிர்ஷ்டசாலி, அவர் அன்போடு விமான நிலையம் வந்து எனக்கு வரவேற்பு அளித்தார்.
ஆளும் கட்சியினருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. எனினும் தமிழக அரசியல் அசாதாரண சூழலால் எதிர்க்கட்சிகள் எதிர்கருத்துடன் இருந்தன. ஆனால் அவர்கள் எப்போதுமே என்னை அவமரியாதை செய்தது கிடையாது. பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்னை வந்த சந்தித்து விட்டு சென்றிருக்கின்றனர். அவர்களுடனும் எனக்கு நட்புறவே இருந்தது.
தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் நாட்டிலேயே முன்மாதிரியானவை. ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்கி அதனால் நடைபெறப் போவது என்ன என்பதை விரிவாகச் சொன்னார்கள். ஒரு சில தலையங்கங்கள் நான் முடிவு எடுப்பதற்குக் கூட உதவி இருக்கின்றன.
இதற்கு முன்னர் இதே போன்றகாலச் சூழலின்போது நடந்தவற்றை மிக அழகாக எடுத்துச் சொல்லி இருந்தனர். குறிப்பாக ஜனநாயகத்தை சரியான முறையில் கையாளும் மீடியாக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில நேரம் ஒரு வழக்கறிஞரை நியமித்து பிரச்னைக்கு தீர்வு கேட்டால் லட்சக்கணக்கில் செலவ செய்ய வேண்டும். ஆனால் சில ரூபாய் கொடுத்து செய்தித்தாள்களை வாங்கினால் போதும் அதில் எண்ணற்ற கருத்துகள், ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் மீடியாக்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். ராஜ்பவனை மக்கள் பார்வைக்காக திறந்து விட்ட போது மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர்
இவ்வாறு வித்யாசாகர் ராவ் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.