டெண்டர் படிவத்தை இணையதளத்தில் வெளியிடாததால் ஒப்பந்த புள்ளியை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 13 இடங்களில்
தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரிய கிடங்குகள் கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டது. கடந்த 14 ம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணையில் 28 ம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் முன் வைப்பு தொகைக்கான வரைவோலையுடன் வாரியத்தை அணுகிய திருவண்ணாமலையைச் சேர்ந்த கருணாநிதியிடம் ஒப்பந்த புள்ளி படிவங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இணைய தளத்தில் ஒப்பந்த புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படாததால் டெண்டரை ரத்து செய்யக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.