டாஸ்மாக் கடைகளில் தீபாவளி விற்பனை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் சுமார் 6 ஆயிரம் உள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், டாஸ்மாக் விற்பனை அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவது பேஷனாகி வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை காலங்களில் கூடுதல் விற்பனைக்காக சரக்குகள் ஏராளமாக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபாவளி தினத்தில் மது விற்பனை குறைந்து உள்ளது. நேற்று முன்தினம் டாஸ்மாக் மூலம் ரூ.97 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. தீபாவளி பண்டிகையான நேற்று ரூ.135 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கடந்த தீபாவளியோடு ஒப்பிடுகையில் மதுபான விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி இருந்தது.
சமீபத்தில் மதுபானங்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியும் 135 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. விலை உயர்த்தாமல் இருந்திருந்தால் இன்னும் விற்பனை குறைந்திருக்கும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவ்வித்தார்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டதாலும் விற்பனை குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுவுக்கு எதிராக போராடி வரும் சமூக நல ஆர்வலர்கள் சிலரிடம் பேசிய போது, ‘தடுக்கி விழுந்தால் மதுக்கடைகள் இருப்பதால் இளைய சமுதாயம் கெட்டு வருகிறது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், விற்பனை குறைந்திருப்பது எங்கள் வாதத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. ஜெயலலிதா சொன்னது போல படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.