மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்.1ம் தேதி தாக்கல் செய்தார். இதில் ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்வே திட்டங்களுக்காக ஒரு லட்சத்து நாற்பத்தி எட்டாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இருப்பினும், டிக்கெட் விலை குறைப்பு குறித்தும், நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் ‘அடிக்கடி மாறும் டிக்கெட் விலை’ குறித்த குற்றச்சாட்டிற்கும் பட்ஜெட்டில் எந்த பதிலும் இல்லை. நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரயில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருந்தது.
மேலும், அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி வசதி, 600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைத்தல், 25,000 பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் (escalators) வசதி, 4,267 ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை பட்ஜெட்டில் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாகும்.
இந்த நிலையில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதில், 48 கி.மீ தூர ஒசூர் – பெங்களூரு இரட்டை ரயில் பாதை திட்டத்தில் ரூ.376 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 20,064 கோடி மதிப்பில் தமிழகத்தில் 27 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.