Advertisment

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்: ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர் இன்று மாலை சந்திப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண நிலை குறித்து குடியரசுத் தலைவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMk, MLAs disqualified

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழக பொறுப்பு ஆளுநர் விச்யாசாகர் ராவ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமாதை யடுத்து, தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.

இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

அந்த வகையில், எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உரிமைக் குழு கூடி குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து திமுக-வினர் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. நாளை மறுநாள் வரவுள்ள இந்த வழக்கு விசாரணை பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவி வரும் இந்த சூழ்நிலைகள் குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது குறித்தும் ஏற்கனவே சட்ட வல்லுனர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, சட்ட வல்லுனர்களின் கருத்து, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ராஜ்நாத் சிங்குடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சந்திக்கவுள்ளார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண நிலை குறித்து குடியரசுத் தலைவருடன் ஆளுநர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ஆலோசனை, சட்ட வல்லுனர்களின் கருத்து உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என தெரிகிறது. முன்னதாக, ஆளுநரை சந்தித்து, பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிய திமுக-வினர், குடியரசுத் தலைவரையும் சந்தித்து மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramnath Kovind Rajnath Singh Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment