கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் இந்த ஆண்டு விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயரிழப்புகளையும் குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பலனாகவும் சாலை உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பான பயணத்தின் காரணமாகவும் முதன் முதலாக ஜனவரி 2016-ம் ஆண்டு முதல் முதல் ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு வரை உள்ள காலத்தில் நடைபெற்ற விபத்துகளை ஒப்பிடும் போது ஜனவரி 2017-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 2017-ம் ஆண்டு வரை 3899 சாலை விபத்துகளும் 319 உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.
சிவப்பு விளக்கை தாண்டுதல், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிதல், அதிக பாரத்தை தவிர்த்தல், வாகனத்தை இயக்கும் போது செல்போன் பேசுவதை தவிர்த்தல், சீட் பெல்ட் அணிதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல், மற்றும் வாகனத்தை இயக்கும் போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொள்ளுதல் போன்ற சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்ள அனைத்து சாலை உபயோகிப்போர்களையும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.
சாலை விபத்துகளின் போது ஏற்படும் அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ்-ஐ அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீண்ட கால வார விடுமுறையின் போது அதிகமான நபர்கள் சாலையை பயன்படுத்துவதால், பயணத்தை இனிமையாக்க, சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, விலை மதிப்பில்லா உயிர்களை காக்கவும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும், செழிப்பினையும் மேம்படுத்தவும் சாலை பயன் படுத்துவோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.