இரண்டு நாட்களாக சென்னை பல்லவன் இல்லத்தில் நடந்து வரும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறுவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்து ஆயிரத்திற்கும் மேலான போக்குவரத்து ஊழியர்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவ்வழியாக வந்த பேருந்துகளின் டிரைவர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்தனர். இதில், பல பேருந்துகள் பயணிகளுடன் ஆங்காங்கே சாலையில் நிற்கின்றன.
இதே போன்று கடலூரிலும் பல இடங்களிலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அங்கு எங்கெல்லாம் அரசுப் பேருந்து செல்கிறதோ, அந்தப் பேருந்துகளை வலுக்கட்டாயமாக நிறுத்துகின்றனர். அதன் டிரைவர்களை தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பல அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுடன் டிச.27,28 ஆம் தேதிகளில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்ப்பு ஏற்படும். இடைக்கால நிவாரணமாக ரூ.1,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும்" என்றார்.
மேலும், சிறிது நேரம் போராட்டம் நடத்திவிட்டு அவர்களாகவே கலைந்து சென்றுவிடுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.