ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூ.20 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின், புயலால் உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பின், தூத்தூர் தனியார் கல்லூரியில் 8 மீனவ கிராம மக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அவரிடம் மீனவ கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்திற்கு பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓகி புயலில் இறந்தவர்களுக்கு இரங்கலையும், மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
மேலும், “ஓகி புயல் ஏற்பட்டபோது உடனடியாக தமிழக அரசு உதவி செய்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தை இரண்டு முறை தொடர்புகொண்டு மீனவர்களை மீட்க கோரினோம். கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மீனவர்களை மீட்க வலியுறுத்தினோம்.”, எனவும் தெரிவித்தார்.
காணாமல்போன கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணி நிறுத்தப்படாது என முதலமைச்சர் உறுதியளித்தார்.
புயலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்ச நிதியுதவியை ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். மேலும், அவர்களது குடும்பங்களில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.