சென்னை டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரகு, கணேஷ். இவர்கள் இருவரும் தேனி ஆயுதப்படை அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் டிஜிபியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுக்க வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென்று தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவலர்கள், அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்கின்றனர். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப் போய்விட்டது. பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது என அடுக்கடுக்காக புகார் கூறினர்.
காவலர்களின் இந்தச் செயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி எஸ்பி பாஸ்கரன், 'இடமாற்றத்திற்கு தவறும், ஒழுங்கின்மையும் தான் அடிப்படை. சாதி ரீதியான பாகுபாடு அல்ல; இருவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ராமநாதபுர மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் ரகு, கணேஷ் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தீக்குளிக்க முயன்ற 2 ஆயுதப்படை போலீசாரையும் இன்று சென்னை மெரினா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏழு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.