'நான் அரசியலுக்கு வருவேன்' என்று இதுவரை ஒருவார்த்தைக் கூட ரஜினி தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் அவர் சொன்ன வார்த்தைகள் என்னவெனில், 'போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்', 'நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லவேயில்லையே', 'நான் என்றைக்கு அரசியல் பிரவேசம் குறித்து முடிவு எடுப்பேனோ அப்போது அனைவரிடமும் அறிவிப்பேன்' என்பது தான்.
ஆனால், கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக, ரஜினி குறித்து தொலைக்காட்சிகளில் நடக்காத விவாதங்களே கிடையாது. பத்தாத குறைக்கு, அவரை நேரில் சந்திக்கும் பிரபலங்கள், 'ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார்' என்றே வெளிப்படையாக கூறுகின்றார். ஆனால், ரஜினியோ, மேலே நாம் குறிப்பிட்ட அவரது சில வார்த்தைகளை மட்டுமே ரிப்பீட் செய்து வருகிறார்.
'அவர் தமிழகத்திற்காக இதுவரை எதற்கு குரல் கொடுத்திருக்கிறார்?' என்பதே பெரும்பாலான இளம் சமுதாயத்தினரின் கேள்வியாகவும், ஆத்திரமாகவும் உள்ளது. ஆனால், இப்படிக் கேள்விக் கேட்கும் இளம் சமுதாயத்திடம், 'வேறு நம்பிக்கையான ஆட்கள் ஆட்சி செய்ய உள்ளார்களா?' என திருப்பி கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. இல்லவேயில்லை. இதுதான் இப்போது பிரச்சனை. அதேசமயம், ரஜினி மீது வெறித்தனம் கொண்ட ரசிகர்களுக்கும் பஞ்சமில்லை. 'நிச்சயம் ரஜினி மக்களை ஏமாற்றமாட்டார்' என்பது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், பெரும்பாலும் சர்ச்சையாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இன்று ஒரு சர்ச்சையான கருத்தினை வெளியிட்டுள்ளார். அதுவும் ரஜினி குறித்து.
"ரஜினி அரசியலுக்கு லாயக்கற்றவர். படிப்பறிவு இல்லாத ரஜினி அரசியலுக்கு தகுதியற்றவர்" என்று தெரிவித்திருக்கிறார். இப்போ தமிழக இளைஞர்கள், சு.சுவாமியை எதிர்ப்பார்களா? அல்லது இந்த விஷயத்தில் ரஜினி பக்கம் நிற்பார்களா? என்பது இன்னும் சிலமணி நிமிடங்களில் வரும் மீம்களில் தெரிந்துவிடும்.