எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) காலை பருத்தித்துறை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைதான 10 பேரையும் விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.