ஸ்ரீதேவி மரணத்திற்கு திரையுலக வி.ஐ.பி.க்கள், நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். ‘அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என புகழாரம் சூட்டினர்.
ஸ்ரீதேவி, தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் ஒரே காலகட்டத்தில் ஜோடியாக நடித்து பெயர் பெற்றவர். தெலுங்கு, மலையாளம் என தனது எல்லையை விரித்து இந்தியிலில் ‘லேடி சூப்பர் ஸ்டாரா’கவே கொடி நாட்டியவர். நேற்று இரவு துபாயில் மாரடைப்பால் காலமானார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் மரணம், நாடு முழுவதும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியா முழுவதும் உள்ள திரையுலக விஐபி.க்கள், நடிகர்-நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
நடிகை கவுதமி : ‘அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை’.
நடிகை திரிஷா : ‘வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும்’
நடிகை பிரீத்தி ஜிந்தா : ‘ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டேன். இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும்’.
நடிகை பிரியங்கா சோப்ரா: ‘எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம்’.
நடிகை சுஷ்மிதா சென் : ‘ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை’.
நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.