சென்னை அருகே கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு, இரு கப்பல் நிறுவனங்களும் 14 நாட்களுக்குள் இழப்பீட்டு தொகையான 141 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் சென்னை அருகே டான் காஞ்சிபுரம் மற்றும் மேபில் என்ற இரண்டு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. கப்பல்களில் இருந்த எண்ணை கடலில் கசிந்ததையடுத்து கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்தது. இதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்படைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பாதிப்படைந்த மீனவர்களுக்கு இழப்பீடாக 240 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என இரண்டு கப்பல் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கோரியிருந்தது.
இந்நிலையில், இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக இரண்டு கப்பல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் கப்பல்களை விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு கப்பல் நிறுவனங்களும் சமரசமாக பேசி இழப்பீடு தொகையாக 141 கோடி ரூபாயை அரசிடம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கப்பல் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 141 கோடி ரூபாயை 14 நாட்களில் அரசிடம் வழங்க வேண்டும்,
மீதமுள்ள 84 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை 21 நாட்களில் அரசிடம் வழங்க வேண்டும். காமராஜர் துறைமுகத்துக்கு சுற்றுச்சூழல் துறை கோரிய தொகையான 5.68 கோடி ரூபாயை 7 நாட்களில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் காமராஜர் துறைமுகத்திலிருந்து டான் காஞ்சிபுரா கப்பலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என உத்தரவிட்டனர். மேலும், இழப்பீட்டு தொகையை இழப்பீடு கோரும் மீனவர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.