தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி ஸ்ரீதர், மலேசியாவில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் (46). கொலை, ஆள் கடத்தல். நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர் ஈடுபட்டு வந்தவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த இவர், ஜாமீனில் வெளியே வந்து, வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார். முதலில் சிங்கப்பூரில் ஸ்ரீதர் தலைமறைவாக இருக்கிறார் என கூறப்பட்டது. பின்னர், அங்கிருந்து மலேசியாவுக்கு தப்பியோடி விட்டார் என கூறப்பட்டது.
இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஆஜராகாமல் தலைமைவாக இருந்த காரணத்தால், இவரை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அதேபோல், ரூ.500 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும், வெளிநாட்டில் பதுங்கியிருந்த படியே, இங்கிருக்கும் அவரது ஆட்களை வைத்து தொடர்ந்து குற்றச் செயல்களை புரிந்து வதுள்ளார். இவரது குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள போலீசார், லண்டனில் படிக்கும் அவரது மகனையும் நேற்று சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தனது பாஸ்போர்ட்டை புதுபிக்க லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரை, போலீசார் காஞ்சிபுரம்அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஸ்ரீதரின் மகனிடம் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் இருந்த வேறு ஒரு நாட்டுக்கு ஸ்ரீதர் தப்பியோடியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தனிப்படை போலீசார் ஸ்ரீதரை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றனர்.