ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சூறாவளி பிரச்சாரத்தில் பல்வேறு கட்சியினரும் ஈடுபட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா புகாரினால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதனால், அமைதியாக இருந்த ஆர்.கே நகரில் தற்போது மீண்டும் அரசியல் கட்சிகளில் சூறாவளி பிரச்சாரம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே அணியில் இருந்த நிலையில், டிடிவி தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, மற்றொரு அணியாக இருந்த ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து மதுசூதனன் களம் இறங்கினார். கடந்த முறை டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது நினைவில் இருக்கலாம்.
ஓ பன்னீர் செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்ததையடுத்து, டிடிவி தினகரன் அணியினர் வெளியேறினர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி-ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து டிடிவி தினகரனுக்கு போட்டியாக யார் களம் இறங்கப்போகிறார்கள் என்பது தான் தற்போதைய கேள்விக் குறியாக உள்ளது.
கடந்த முறை டி.டி.வி. தினகரனுக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் களம் இறங்கிய நிலையில், தற்போது அவர் மீண்டும் களம் இறக்கபடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 76 வயதாகும் மதுசூதனன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார். 1991-ஆண்டு இதே ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் மதுசூதனர். மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றவும் செய்திருக்கிறார் மதுசூதனன். குறிப்பாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியில் மதுசூதனன் இருந்து வருகிறார் என்பதால், அங்குள்ள மக்களுக்கு அறிமுகமானவர். எனவே தான் கடந்த முறை அவரை வேட்பாளராக நிறுத்தியது ஓ.பி.எஸ் அணி.
ஆனால், 76 வயதாகும் மதுசூதனன் சூறாவளி போல தற்போது பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்விக்குறி எழவே, மாற்று வேட்பாளரை எடப்பாடி அணியினர் தேடுவதாக சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க, இந்த முறை ஆர்.கே நகர் தொகுதியில் மதுசூதனன் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : டிசம்பர் 31-க்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.