ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
திமுக சார்பில் மீண்டும் மருது கணேஷ் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதே போல ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் இ.மதுசூதணனும், டிடிவி தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறைந்த பெளர்ணமி நாளான இன்று முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்கின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் அரசியல் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று வரையில் 10பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அவர்களில் 9 பேர் சுயேட்சைகள். நாம்தமிழர் கட்சியின் சார்பாக கலைக்கோட்டுதயம் 10வது ஆளாக மனுத்தாக்கல் செய்தார். இன்று முதல் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பகல் 1.20 : அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அவருடன் அமைச்சர் ஜெயகுமார், தேர்தல் பொறுப்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி. ஆகியோர் வந்தனர்
பகல் 1.15 மணி : வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி - எந்த சின்னம் வந்தாலும் வெற்றிப்பெறுவோம். தொப்பி சின்னம் கேட்டுள்ளோம். புரட்சி தலைவர் உருவாக்கிய சின்னம் இரட்டை இலை. அதை வளர்த்தவர் ஜெயலலிதா. இது யார் கையில் இருக்க வேண்டும் என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் உறுதி செய்யும். மார்ச் மாதம் என்னென்ன வாக்குறுதி கொடுத்தோமோ, அதை நிறைவேற்றித் தர தொகுதி மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பகல் 1.10 மணி : தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார், டிடிவி.தினகரன்.
பகல் 12.50 மணி : டிடிவி.தினகரன் வேட்புமனுத்தாக்கல் செய்ய தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருடன் வெற்றிவேல் எம்.எல்.ஏ., கலைராஜன் உள்பட கட்சி பிரமுகர்கள் வந்தனர். மண்டல அலுவலகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதிமுக தொண்டர்கள் அதிமுக கட்சிக் கொடியைத் தவிர்த்து, கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியை பயன்படுத்தினார்கள்.
பகல் 12.40 மணி : திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனுத்தாகல் செய்தார்.
பகல் 12.30 மணி : திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனுத்தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் வந்தார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர்கள் சுதர்சனம், சேகர்பாபு உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காங்கிரஸ் வட சென்னை மாவட்ட தலைவர் திரவியமும் உடனிருந்தார்.
காலை 11 மணி : டிடிவி.தினகரன் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம்’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.