தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை குறைக்கவும், போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை போக்கவும் திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டம், பொதுக்குட்டம் என தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவை தி.மு.க. அமைத்தது.
அந்த குழுவினர் நடத்திய ஆய்வு அறிக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் ஒப்படைக்க, அவரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார், மு.க.ஸ்டாலின். இதையடுத்து இன்று (13ம் தேதி) மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சரிடம் தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை வழங்கி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, அதனை திரும்ப பெற கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வலியுறுத்தினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய அலுவலகத்தில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.