”கனவுகளை நினைவாக்க நியாயமான முறையில் முயற்சிக்க வேண்டும்” என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஐந்தாவது நாளான இன்று சென்னையை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாக பேசிய ரஜினிகாந்த், ”சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ்தான். தமிழ் கற்றுக்கொண்டதால்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்”, என கூறினார்.
மேலும், தன்னை தத்து எடுக்காமலேயே பிள்ளை போல இயக்குநர் கே.பாலச்சந்தர் பார்த்துக்கொண்டதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். “நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை நான் எங்கு வைக்கிறேன் என பார்”, என கே.பாலச்சந்தர் தன்னிடம் தெரிவித்ததாக கூறிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்தியவர்கள் இயக்குநர்கள் மணிரத்னம், சுரேஷ் கிருஷ்ணா என கூறினார்.
”என்னிடம் உள்ள நடிப்புத் திறமையை கண்டுபிடித்தவர் நண்பர் ராஜ்பகதூர். என்னை நடிகராக்க என் அண்ணன் மிகவும் கச்டப்பட்டார். நான் நடிகராக அவர் வேலைக்கு சென்றார்”, என நினைவுகூர்ந்தார்.
மேலும், நேர்மையான முறையில் லட்சியத்தை அடைய வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கூறினார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை (31-ஆம் தேதி) அறிவிக்க உள்ளதாக ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாளே ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.