புதிய கட்சி தொடங்க உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் கடந்த 31ம் தேதி அறிவித்தார். இதற்கான தனியாக, ரஜினி மன்றம்’ என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் ரஜினிகாந்த் ஆரம்பித்துவிட்டார்.
ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்துக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னையில் நேற்று மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். தொடர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் ஓரிருவரை சந்திக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியல் களம் புக முடிவெடுத்தது முதல், திமுக.வுடன் பட்டும் படாமல் இருந்து வருகிறார். முரசொலி விழாவில்கூட மேடையேறுவதை தவிர்த்தார். வருகிற காலங்களில் திமுகவை எதிர்த்தே பிரதானமாக அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என்பது ரஜினியின் கணிப்பு.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தபிறகு வைரமுத்துவுடன் வந்து ஒரு முறை மட்டுமே ரஜினிகாந்த் சந்தித்தார். அதன்பிறகு பெரிதாக அவர் கருணாநிதி மீது ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. இந்தச் சூழலில் நெருங்கிய நட்பு வட்டத்தினர் சிலரது ஆலோசனைப்படி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க அப்பாய்ன்மென்ட் கேட்டார் ரஜினி. மாலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு முன்பு மாலை 6 மணி முதலே ரஜினி ரசிகர்கள் குவியத் தொடங்கினர். நடிகர் ரஜினிகாந்த் மாலை 7.50 மணிக்கு அவர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் வரவேற்று, கருணாநிதியிடம் அழைத்துச் சென்றனர்.
சுமார் பத்து நிமிடங்கள் கருணாநிதியிடம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, அங்கிருந்து கிளம்பினார். வெளியில் வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள், இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றேன். அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டு வாழ்த்துப் பெற்றேன்’ என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.