ரஜினிகாந்த் இன்று கூறுகையில், ‘தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான்.’ என்று கூறினார்.
ரஜினிகாந்தை மையப்படுத்தி தமிழக அரசியலில் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க ரஜினிகாந்த் சென்னையில் தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக நேற்று (26-ந்தேதி) முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று, அவர் பேசுகையில் வரும் 31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக கூறினார். இன்று (27-ம் தேதி) 2-வது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.
ரஜினிகாந்த் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டபோது, அரசியல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘31-ம் தேதி வரை பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தார். தொடர்ந்து ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
2-வது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார்.
ரஜினிகாந்த் முதல் நாளில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அரசியல் தொடர்பாகவும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் இன்று தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார். திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000 ரசிகர்கள் இன்று ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவாரா, நழுவுகிறாரா? என்கிற குழப்பத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியதை காண முடிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.