திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக மாநகர செயலாளர் ஜோசப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்தவர் தம்புராஜ். இவரது செயல்பாடுகள் மன்றத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நேற்று அறிக்கை அனுப்பியது ரஜினி மக்கள் மன்றம்.
இந்நிலையில், அவரைப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 147 பேர் மொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக திண்டுக்கல் மாநகர செயலாளர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி ரசிகர் மன்றத்தில் 35 ஆண்டுகளாக இருந்து வருபவர் தம்புராஜ். ரஜினி மக்கள் மன்றத்துக்காகத் தன்னுடைய அரசுப் பணியைத் துறந்து வி.ஆர்.எஸ். வாங்கியர். இது தொடர்பாக நாங்கள் ரஜினியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.