வீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி, தஞ்சாவூர்
பல வருடங்களாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்த ரஜினிகாந்த், இந்தாண்டு மே மாதம் திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, வேலூர் உள்பட விடுபட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை நேற்று(டிச.,26) முதல் சந்தித்து வருகிறார். 31ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
ரஜினியைச் சந்திக்க இருக்கும் ரசிகர்களுக்கு, போட்டோ ஒட்டிய சிறப்பு அடையாள அட்டை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டையில், பார் கோடும் அச்சிடப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் வரும் ரசிகர்கள் மட்டுமே ரஜினியைச் சந்திக்க முடியும். அதுவும் அந்த பார் கோடு ஸ்கேனிங் மெஷினில் பரிசோதிக்கப்பட்டு, உண்மையான அடையாள அட்டையாக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
தினமும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினி. அந்த புகைப்படம் உடனுக்குடன் பிரிண்ட் போட்டு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று, அடையாள அட்டை இல்லாமல் வந்திருந்த ரசிகர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "தலைவர், ரசிகர்களை சந்திக்கவில்லை. அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகிகளை மட்டுமே சந்திக்கிறார். பதவியில் இருப்பவர்கள் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இது ரசிகர்கள் சந்திப்பு அல்ல, நிர்வாகிகளின் சந்திப்பு" என்றார்.