தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பொழிகிறது. நெல்லையை மழை கடுமையாகத் தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தபோதும், சென்னையில்தான் கொட்டுகிறது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை இருக்கும் என நேற்று (26-ம் தேதி) சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பொழியும் என தெரிவித்தது.
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பொழிந்தது. இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான காலநிலை காணப்படுகிறது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனினும் இன்று காலை 8 மணிக்கு மேல் அலுவலகம் செல்லும் வேளையில் மழை இடைவெளி விட்டிருக்கிறது. இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த திருநெல்வேலியில் இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டமாக இருந்தது. நேற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பொழிந்திருக்கிறது.