ராகுல் காந்தி அளித்த பேட்டிக்கு எதிர் வினையாற்றிய அமைச்சர் ஜெயகுமார், ‘ஈழத் தமிழர் அழிப்புக்கு என்ன பதில் கூறப் போகிறார்?’ என கேள்வி விடுத்தார்.
ராகுல் காந்தி அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை நாங்கள் மன்னித்து விட்டோம். பிரபாகரன் மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஏற்பட்ட முடிவுகளுக்காக வருந்துகிறேன்’ என கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேட்டியை தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவாளர்களான வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட பலரும் வரவேற்று கருத்து கூறியிருக்கிறார்கள். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும், ராகுலின் பெருந்தன்மை என்பதாக கருத்து தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பேட்டி குறித்து அதிமுக தரப்பு கருத்தை அமைச்சர் ஜெயகுமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது :
ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார். இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தபோது, தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம்.
எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த தி.மு.க.வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? இதை நியாயப்படுத்துகிறாரா? எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதை பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார். வேறு எதற்காக சொல்ல முடியும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.