Advertisment

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கதிராமங்கலம் போராட்டத்தால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் கிடைத்தது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் பணியை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதாக கூறி, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்கள் கிராமத்தில் மீத்தேன் திட்டம், பாறை படிம எரிவாயு எனப்படும் ஷெல் கேஸ் திட்டம் ஆகியவற்றை மறைமுகமாக செயல்படுத்த முனைவதாகவும், அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கடந்த ஜூன் 30-ஆம் தேதி, கதிராமங்கலத்தில் எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென ஏற்பட்ட கலவரத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பேராசிரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை நீதிபதி பஷீர் அகமது முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவரது தீர்ப்பில், பேராசிரியர் ஜெயராமன் உட்பட எட்டு பேருக்கும் நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அதாவது, பேராசிரியர் ஜெயராமன் மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மற்ற ஏழு பேரும் திருச்சியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்து இட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து, அவர்கள் எட்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

பேராசிரியர் ஜெயராமனை விடுவிக்கக் கோரி தொடர்ந்து கதிராமங்கலம் பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment