காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த இளைஞரை போக்குவரத்து போலீஸார் தாக்கியதால், அவர் தீக்குளித்தார். சென்னையில் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் அருகே இன்று (ஜனவரி 24) போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் ஒருவர், சீட் பெல்ட் அணியாமல் இருந்தார். அவரை போலீசார் கீழே இறக்கி, விசாரணை செய்தனர்.
அப்போது அந்த இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவமானமடைந்த அந்த வாலிபர், காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பில் ஈடுபட்டார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் என ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் உயர் அதிகாரிகள் அறிவுறை வழங்கியிருக்கிறார்கள். அதை கருத்தில் கொள்ளாது, இந்த அத்துமீறலை போலீஸார் அரங்கேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.