சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர், இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அமைந்துள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் (27) என்பவர், இன்று அதிகாலை சுமார் 4.50 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரையைச் சேர்ந்தவரான அருள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த ஜெயலலிதா நினைவிடத்திற்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். காவலர் அருண் ஏன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தினார். இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை ஆயுதப்படை காவலர் ஒருவர் ஜெ.நினைவிடத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மெரினாவில் தற்கொலை செய்துகொண்ட காவலரின் தந்தை மலைராஜா கண்ணீர் மல்க கூறுகையில், "எனது மகன் அருண் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும். தற்கொலை செய்யும் மனநிலையில் எனது மகன் இல்லை. நேற்று இரவு பணிக்குச் செல்வதற்கு முன் எனது மகன் என்னிடம் போனில் நன்றாகத்தான் பேசினார்" என்று தெரிவித்துள்ளார்.
-